Skip to main content

குரங்கு மற்றும் பறவை


ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது. 
அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது.  மனம் பொறுக்காமல், "குரங்காரே என்னைப் பாரும். வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக் கொள்ள கூடு கட்டியிருக்கிறேன்.  அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா?" என்று புத்தி சொன்னது. 
இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. "உன்னை விட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா? இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்" என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது, 'அறிவுரைகளைக் கூட அதைக் கேட்டு நடப்பவர்களுக்குத் தான் சொல்ல வேண்டும்  என்று.
துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.
நாமும் ஒருவருக்கு அறிவுரை வழங்கு முன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்து கொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.

Comments

FEEDBACK

Name

Email *

Message *