Skip to main content

மெய் பிம்பங்கள்


உண்மையை காட்டும் கண்ணாடியே 
நீயும் சத்திய சோதனை படித்தாயோ ? 
என்னை நீ காட்டுகிறாய் 
தன்மைச் சற்றும் மாறாமல் 
ஒப்பனை செய்துப் பார்க்கையிலே 
ஒய்யாரமாய் என்னைக் காட்டுகிறாய் 
கோபப்பட்டு நான் வந்தால் 
சீற்றமாகக் காட்டுகிறாய் 
புன்முறுவலுடன் நான் நின்றால் 
தன்மையாகச் சிரிக்கின்றாய் 
என் சுட்டு விரலை நீட்டினால் 
எனையே குறித்துக் காட்டுகிறாய் 
கனிந்து உருகி நான் நின்றால் 
கசிந்து உருகி எனை நோக்குகிறாய் 
சோகப் பட்டு கண்ணீர் சிந்தையிலே 
நீயும் என்னுடன் அழுகின்றாய் 
என் உண்மை நிலையை காட்டுகிறாய் 
என் உணர்வுகளை பிரதிபலிக்கிறாய் 
உடைந்துச் சிதறி கிடந்தாலும் 
ஒவ்வொரு துண்டிலும் எனை காட்டுகிறாய் 
உடையும் பொருளே ஆனாலும் 
உயர்ந்த கருத்தை உணர்த்துகிறாய் 
நம் சிந்தையும் செயலும் எப்படியோ 
நம் வாழ்வும் அமையும் அப்படியே !


Comments

FEEDBACK

Name

Email *

Message *